
கட்சியின் இரட்டைத் தலைமையே நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும் போது ஒன்றைத் தலைமை குறித்தோ நானோ, பழனிசாமியோ பேசியதில்லை. ஒற்றைத் தலைமை முடிவு ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை பொதுச்செயலாளராக்கியது ஏன்?
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலா இணைப்பு பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவெடுப்பார்கள். இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. தேனி மாவட்ட தீர்மானமும் அப்படியானது தான். தொண்டர்கள் மனசஞ்சலம் படக்கூடாது என்பதால் தான் எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தேன்.
ஜெயலலிதா காலமாகிவிட்ட காரணத்தால், சசிகலாவை அப்போது தற்காலிக பொதுச்செயலாளராகவே தேர்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவோடு இணைந்து பணியாற்றியவர்கள் சற்று விலகி இருப்பவர்கள் இணைந்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டிய நிலை இன்று இருக்கிறது என சசிகலா பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
என்னை ஓரங்கட்ட முடியாது
ஒற்றைத்தலைமை பிரச்சினையை எழுப்பியவர்களை எடப்பாடி பழனிசாமிதான் கண்டிக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு தொண்டர்கள்தான் காரணம். ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா என்று தனது கருத்தை எடப்பாடி தான் கூற வேண்டும். அதிமுகவில் என்னை ஓரங்கட்ட முடியாது. கட்சியின் இரட்டைத் தலைமையே நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும் போது ஒன்றைத் தலைமை குறித்தோ நானோ, பழனிசாமியோ பேசியதில்லை. ஒற்றைத் தலைமை முடிவு ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றார்.
ஜெயக்குமார் பேட்டியால் பிரச்சனை
ஒற்றைத்தலைமை பிரச்சினை எப்படி உருவானது என எனக்கே தெரியாது. ஜெயக்குமார் அளித்த பேட்டியால் ஒற்றைத்தலைமை பிரச்சினை பூதாகரமாக மாறியது. எனவே இரட்டை தலைமைதான் அதிமுகவில் தொடர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். இருவரும் இணைந்த போது எந்த பதவியையும் நான் கேட்டதில்லை என தெரிவித்துள்ளார்.