3 ஆண்டு கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்தது ஏன்? அதில் கையெழுத்திட்டது யார்? சிதம்பரம் கேள்வி

By vinoth kumarFirst Published Apr 3, 2023, 1:19 PM IST
Highlights

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி பேசியதற்கு மூன்று நாட்கள் கழித்து ஏப்ரல் 16ம் தேதி குர்னேஷ் மோடி என்பவர் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடுக்கிறார். 

2019ம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

காரைக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  ராகுல் காந்தி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் மற்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து போராட்டம் மற்றும் ஆர்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். ராகுல்காந்தி தகுநீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி பேசியதற்கு மூன்று நாட்கள் கழித்து ஏப்ரல் 16ம் தேதி குர்னேஷ் மோடி என்பவர் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் தண்டனை வாங்கித் தரணும் என்றெல்லாம் புகார்தாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சென்று என்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என்கிறார் புகார்தாரர். இதை ஏற்று குஜராத் உயர்நீதிமன்றம், சூரத் வழக்கை விசாரிக்க தடை விதிக்கிறது. 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடை நீடிக்கிறது. சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது நீதிபதி மாற்றப்பட்டார்.

2019ம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க வேண்டாம் என மனுதாரரே தெரிவித்தும் சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வழக்கை 30 நாட்களில் விசாரித்து முடித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு குற்றவியல் அவதூறு வழக்கும் 30 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதில்லை.

23ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு 24ம் தேதி அவசர அவசரமாக ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல்காந்தி தகுதிநீக்க உத்தரவில் கையெழுத்திட்டது யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ராகுலை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யவில்லை. தண்டனை சட்டம் நிறைவேற்றப்பட்டு 163 ஆண்டுகளில் வாய்மொழி அவதூறு வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு தண்டனை வழங்கியதே இல்லை. ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

click me!