இப்போது சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் தேவையா? நாடகம் நடத்துவது யார்? ஸ்டாலின் கேள்வி

First Published May 24, 2018, 4:05 PM IST
Highlights
Who performs the drama - MK Stalin


தூத்துக்குடி பிரச்சனை நடந்து வரும் நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் இப்போது தேவையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமிதான் நாடகம் நடத்துவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும்  20 எம்எல்ஏக்கள் சென்றனர். ஆனால், முதலமைச்சரை  சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள், முதலமைச்சர் அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த  காவலர்கள் ஸ்டாலினை குண்டுகட்டாக  தூக்கிச் சென்று வெளியேற்றினர்.  இதையடுத்த  அவர்கள்  தலைமை செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  தலைமை செயலகம் வாயிலில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக கூறுகிறார் என்றும், ஸ்டாலினை சந்திக்க நான் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றார். ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்றே ஸ்டாலின் திட்டமிட்டு நடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறினார்.

இதனிடையே, தலைமை செயலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு ராயபுரம் கொண்டு செல்லப்பட்ட மு.க.ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி பிரச்சனை நடந்து வரும் நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் அவசியமா என்று கேள்வி எழுப்பினார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இப்போது தேவையில்லை என்றும், எடப்பாடி பழனிசமிதான் நாடகம் நடத்துவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடியில் திட்டமிட்டு போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். சாதாரண உடையில் வந்த போலீசார் வேன் மீது படுத்துக் கொண்டு குறிபார்த்து சுட்டிருக்கிறார்கள். இதனை நடத்திவிட்டு, நாடகம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இதற்கு முன்பு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், துப்பாக்கி சூடு நடந்த பிறகு, சம்பவ இடத்துக்கு முதலமைச்சர் சென்று வந்துள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி, பதவியை தக்கவைத்துக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அங்கு செல்லாமல் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்திப்பதற்கு காரணம், ஆட்சியை கலைத்து விடாதீர்கள் என்று கூறுவதற்காக இருக்கலாம் என்றார். 14 பேரை சுட்டதுபோல் எங்களை சுட்டாலும் பரவாயில்லை. எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும என்று கூறினார். போலீசார் தற்காப்புக்கு எவ்வளவோ முன் எச்சரிக்கை நடவடிக்கை உள்ளது. அதன்படி நடந்திருக்கலாம். முதலில் கண்ணீர்புகை குண்டு, ரப்பர் குண்டு பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

click me!