
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போலீசாருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் போலீசாரே தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகின. சரமாரியாக தாக்கிய நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எழுந்துபோ... ரொம்ப நடிக்காதே என்று போலீசார் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதனைப் பார்த்த பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கலவரம் நடைபெற்ற இடத்தில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்துக் கொண்டு சென்ற போலீசார், அங்கிருந்த சிறுவன் ஒருவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வருகிறார்கள் என்றுதான் நாங்கள் வீட்டுக்குள் செல்கிறோம். ஆனால், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சிறுமியை பூட்ஸ் காலால் உதைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர் அந்த வீட்டைச் சேர்ந்த பெண்கள். போலீசாரின் அத்துமீறிய செயலை அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதேபோல், வீட்டுக்குள் புகுந்த போலீசார் அங்கிருந்த பெண்களை கையைப் பிடித்து இழுத்துள்ளனர். போலீசார், எங்கள் கைகளை பிடித்து இழுப்பதற்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்று பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதேபோல் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பகுதிகளுக்குள் சென்ற போலீசார், அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடியில் போலீசாரின் அத்துமீறல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்ற்ம சாட்டுகின்றனர்.