அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார்..? அதிமுக மூத்த தலைவர்களில் யாருக்கு லக் அடிக்கப்போகிறது.?

By Asianet TamilFirst Published Aug 6, 2021, 9:30 PM IST
Highlights

அதிமுகவில் புதிதாக அவைத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

1972-இல் அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் பதவியை பலமானதாக உருவாக்கினார். தலைவர் பதவி என்பது அண்ணாவுக்காக என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதன்படி அதிமுகவில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் மாநில அளவில் உருவாக்கப்பட்டன. அதேவேளையில் அதிமுகவில் அவைத்தலைவர் என்கிற பதவி உருவாக்கப்பட்டது. இந்தப் பதவியில் இதுவரை பாவலர் மா.முத்துசாமி, வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், சி.பொன்னையன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் இருந்தனர்.


அதன்பிறகு கடந்த 2007-ஆம் ஆண்டில் மதுசூதனன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக மதுசூதனன் தலைவராக இருந்த நிலையில் தற்போது காலமாகிவிட்டார். எனவே இந்தப் பதவி அதிமுகவில் அடுத்து யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர். காலம் முதலே கட்சியின் மூத்த நிர்வாகிகளைத்தான் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். எனவே, தற்போதும் அதிமுகவில் சீனியர் தலைவர்கள் அவைத் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தனபால், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன், வரகூர் அருணாச்சலம் ஆகியோரில் ஒருவர் அவைத் தலைவராகலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அவைத் தலைவருக்கென தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அது ஒரு கெளரவ பதவியாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் மாவட்ட அளவிலும் இந்தப் பதவி உள்ளது. ஆனால், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கபட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்ட பிறகு, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியோடு அவைத் தலைவர் கூட்டும் அதிகாரம் கிடைத்தது. எனவே அதிமுகவில் அடுத்த அவைத்தலைவர் பதவிக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!