
புதிய ஜனாதிபதி யார்? ; இன்று வாக்கு எண்ணிக்கை… காலை 11 மணிக்கு தொடங்குகிறது; 5 மணிக்குள் முடிவு தெரியும்
ஜனாதிபதி தேர்தலில் கடந்த 17-ந்தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மாலை 5 மணிக்குள் யார் புதிய ஜனாதிபதி என்பது தெரியவரும்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியோடு முடிகிறது. இதையடுத்து, தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம் நாத் கோவிந்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் களமிறங்கினார்.
ஒட்டுமொத்தமாக மக்களவை, மாநிலங்கள் அவையில் 776 எம்.பி.க்களில், 771 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். மாநிலங்கள், மக்கள் அவையில் தலா 2 இடங்கள் காலியாகவும், பா.ஜனதா எம்.பி. சேடி பஸ்வான் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. டெல்லி நாடாளுமன்றத்தில் 717 எம்.பி.க்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், 714 எம்.பி.க்கள் மட்டுமே வாக்கைப் பதிவு செய்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தல் அதிகாரியுமான அனுப் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், “ வாக்கு எண்ணிக்கை வரும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும்.. முதலில் நாடாளுமன்றத்தின் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படும், அதன்பின், ஆங்கில அகரவரிசைப்படி ஒவ்வொரு மாநிலத்தின் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
வாக்குகள் எண்ணுவதற்காக தனித்தனியாக 4 மேஜைகள் போடப்படும், 8 சுற்றுக்களாக வாக்கு எண்ணப்படும்.மாலை 5 மணிக்குள் புதிய ஜனாதிபதி யார் என்பதுதெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.