நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்றும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் பெருகிக் கிடப்பதாகவும் நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்தார்.
இதனால் வெகுண்டெழுந்த தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை, எச்.ராஜா போன்றோர் கமலஹாசனை கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.
அதே நேரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், திருநாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன் போன்றோர் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள கமலின் செயல் அரசியலுக்கு வருவதற்கான முயற்சி என தெரிவித்துள்ளார்
அவர் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்பதாகவும் திருமா கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் பாஜகவை அவர், விமர்சிப்பதால் கமலை அக்கட்சியினர் எதிர்க்கின்றனர் என்றும் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.