சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் யார்.. சபாநாயகர் அப்பாவு சொன்ன பரபரப்பு தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 4:10 PM IST
Highlights

எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பது குறித்து சட்டமன்றம் நடக்கும் போது தெரியும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மேலும் அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விஷயம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பது குறித்து சட்டமன்றம் நடக்கும் போது தெரியும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மேலும் அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விஷயம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே அதிகார போட்டி நடந்து வருகிறது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, இதேபோல்  ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் தன்னை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க கூடாது என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது சபாநாயகர் அப்பாவுவின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் வ.உ சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது,

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாவுசி திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினர், பின்னர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் அறிவித்த படி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாவுசி மணி மண்டபம் ஒலி ஒளி காட்சிகள் மூலம் வரலாற்றை அனைவரும் காணும் வகையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். வாஉ சி மற்றும் பாரதியார் ஆகியோரது தியாகங்களை போற்றும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக விவாகரம் நாட்டுக்கு ஒன்றும் முக்கியமான விஷயமில்லை, அதிமுகவில் நடந்து வருவது உட்கட்சி விவகாரம், அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதிமுகவினர் பல பிரிவுகளாக உள்ளனர்.

யார் தலைமை என்பதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் புகார் கொடுத்த மனு மீதான நடவடிக்கை சட்டமன்றம் நடக்கும் போது தெரியும்.  இந்த ஆட்சியில் சட்ட மன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, எனவே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.  
 

click me!