
தமிழக கோவில்களுக்கு சொந்தமாக இருந்ததாக 1985 – 87 ம் ஆண்டில் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு, 1985-86, 1956-87 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், 2018–19, 2019–20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். அதேபோல, கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றவேண்டும் எனவும், கோவில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை கோவில்களுக்காக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, 1985 – 87 ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள நிலங்களின் விவரங்களையும், 2018 – 2020 ம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட நிலங்களின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கோவை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார் பதிவாளர், அதுசம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.