அதிமுக எங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது... அழுத்தங்களுக்கு அசைந்து கொடுக்காத எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Feb 5, 2021, 12:10 PM IST
Highlights

சசிகலா பக்கம் செல்லக்கூடும் என கூறப்பட்ட அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியுடன் தான் இதுவரை இருக்கின்றனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அதிமுக தனது முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க முயற்சித்து வருகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார். ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், சிகிட்சைக்கு பின்னர் சில நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரை பயன்படுத்தியதோடு, அதில் அதிமுகவின் கொடியையும் கட்டியிருந்தார்.


 
இது தொடர்பாக அந்த நிமிடத்திலேயே அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். கொரோனாவிலிருந்து மீண்டிருக்கும் சசிகலா நாளை மறுதினம் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவதற்கு எதிராக மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் காவல்துறை தலைமை இயக்குநரை நேற்று சந்தித்து புகார் அளித்தனர். அதில் ’அதிமுகவுக்கு உரிமைப் பொருளான கட்சிக் கொடியை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை தவிர, மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஆனால், சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது எங்கள் இயக்கக் கொடியை பயன்படுத்தினார். அதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை. அது தொடரக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த புகாரை அளித்தனர். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ’’மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும் லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும், வியர்வையாலும் கட்டமைக்கப்பட்ட கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அதிமுகவை ஒன்றுபடுத்தி வலிமை மிக்க இயக்கமாக வைத்திருந்தார்.  அதேபோன்றுதான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடியும் செயல்பட்டு, இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து வருகிறார்.

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பிளவுபட்டு விடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் எதிர்பார்த்து அரசியல் எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகளையெல்லாம் சாமர்த்தியமாக முறியடித்துக் காட்டினார். சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும், கட்சியில் இடமில்லை என்பதை தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அழுத்தம் திருத்தமாக உணர்த்தும் விதமாகவே எடப்பாடி இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

’’முதல்வர் எடப்பாடி மட்டுமல்லாது மூத்த அமைச்சர்களுமே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். சசிகலா பக்கம் செல்லக்கூடும் என கூறப்பட்ட அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியுடன் தான் இதுவரை இருக்கின்றனர். எனவே, கட்சி முழுமையாக, எடப்பாடி வசம்தான் உள்ளது. இதனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்து தேர்தல் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்’’ என்கிறார்கள். 

click me!