பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன நச் பதில்..!

By vinoth kumarFirst Published Sep 27, 2021, 12:36 PM IST
Highlights

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதிலிருந்து ஒவ்வொரு துறையிலும் கவனமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எடுக்கிற முடிவுகளினால் விமர்சனம் வந்தால்கூட பரவாயில்லை, எந்தவொரு குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாகவும், கவனமாகவும் இருக்கிறோம். 

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;- எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் தொடர்பாக இதுவரை 3,000 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த ஆண்டும் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை,மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும்,  கொரோனா தொற்றை காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது கல்வி வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதிலிருந்து ஒவ்வொரு துறையிலும் கவனமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எடுக்கிற முடிவுகளினால் விமர்சனம் வந்தால்கூட பரவாயில்லை, எந்தவொரு குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாகவும், கவனமாகவும் இருக்கிறோம். பெற்றோர்கள், மாணவர்கள், சுகாதாரத் துறை உள்ளிட்டோரின் கருத்துகளை உள்ளடக்கியே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார்.

ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்துள்ளோம். அதன்படி ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகும்போது, பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

click me!