அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டி அவமதிப்பு நடத்தப்பட்டது. அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டியது யார் என களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிற கொடிகளை போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலை செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்’’ என அவர் கண்டித்துள்ளார்.