அம்மா மருத்துவமனையில் இருந்த போது முக்கியமான அமைச்சரின் உதவியாளர் என்னிடம் வந்தார். ஒரு விஷயம் சொல்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.
அம்மா மருத்துவமனையில் இருந்த போது முக்கியமான அமைச்சரின் உதவியாளர் என்னிடம் வந்தார் என அப்போது நடந்த ஒரு சம்பவத்தை ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் விளக்கியுள்ளார்
.
அதில், ‘’அப்போலோ மருத்துவமனையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைத்து பார்க்கும் போது என் முக்கியத்துவத்தை நானே பார்த்து சிரித்தேன். அம்மாவின் நிலை கண்டு துடித்தேன். அவற்றை உங்களுக்கு சொன்னால் புரியுமா? அம்மாவின் உடல் நலம் குறித்து அடுத்தவர்களை கேட்டுத்தான் நானே தெரிந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் என்னை கூப்பிட்டு யாரும் விளக்கவில்லை. அதற்கான முக்கியத்துவம் எனக்கு அப்போது இருப்பதாக நானும் உணரவில்லை. விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அதை வெளியே சொல்வதிலும் அர்த்தமில்லை. விபரம் தெரியாதவர்கள் உண்மையை சொல்லுங்கள் என்று கேட்பதிலும் குற்றமில்லை. அம்மாவிற்கு என்ன? என்று சொல்வதற்கு நான் மருத்துவரும் இல்லை, உடனிருந்து கவனித்துக்கொண்ட செவியலியரும் இல்லை.
நான் சொல்ல வந்த விஷயமே வேறு! அதற்கு போவோம். அம்மா மருத்துவமனையில் இருந்த போது முக்கியமான அமைச்சரின் உதவியாளர் என்னிடம் வந்தார். ஒரு விஷயம் சொல்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க என்ற பீடிகையோடு ஆரம்பித்தார். பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன். எங்க அமைச்சர், இனி பூங்குன்றன் சொல்வதை கேட்காதீங்க, கார்த்திகேயன் சொல்வதை மட்டும் கேட்டு செய்தால் போதும், பூங்குன்றன் சொன்னால் கேட்டுக்கொள்ளுங்கள், ஆனால் செய்யாதீங்க என்று சொல்கிறார் என்றார். நான் சிரித்துக்கொண்டே இனி நீங்களும் அவர் வழிதானே என்றேன். அதற்கு அவர் உண்மைதான் நானும் மற்றவர்களிடம் கண்டிப்பாக அப்படிதான் நடந்து கொள்வேன். ஆனால் உங்கள் ஒருவரிடம் மட்டும் அப்படி நடந்து கொள்ளமாட்டேன் என்றார்.
ஏன்? என்றேன். அதற்கு அவர், ஆன்மீகத்தில் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தவர் நீங்கள், அதனால் உங்களை நான் எளிதில் மறக்கமாட்டேன் என்றார். இதை கேட்டு நான் சிரித்தேன். என்னுடன் தைப்பூச பாதயாத்திரையில் முருக பக்தராக இவர் கலந்து கொண்டதும் அரசியல்தான் என்பதை புரிந்துகொண்ட என் மனம் என்னையறியாமல் உள்ளுக்குள்ளே கண்ணீர் வடித்தது. அம்மாவின் உடல்நலம் மோசமாகி இருக்கிறது என்பதையும் உள்ளுணர்வு உணர்த்தியது. அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை என்றதும் என் முக்கியத்துவம் குறைந்தததில் வியப்பில்லை. அதுதான் அரசியல். அன்று சின்னம்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தவர்கள் இன்று அவர் பக்கமும் இல்லை. நாளை இவர்கள் யார் பக்கமோ? இதை தெரிந்தே! நானும் அம்மாவிற்காக இந்த நன்றி கெட்ட அரசியலில் ஓடினேன்.
கேட்க வேண்டியவர்களின் பின்னால் சென்று கொண்டும், புகழ்ந்து கொண்டும், என்னிடம் விளக்கம் கேட்பதைப் பார்க்கும் போது வேடிக்கையாகவே தோன்றுகிறது. 'அம்மா இருந்தால் தான் நான் ஹீரோ! இல்லையென்றால் நான் ஜீரோ!' இதில் எது எனது விருப்பமாக இருக்கும். நீங்களே சொல்லுங்கள்’’எனத் தெரிவித்துள்ளார்.