jai Bhim: நடிகர் சூர்யாவை வம்பிழுத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. பாமகவை எச்சரிக்கும் கருணாஸ்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2021, 11:06 AM IST
Highlights

நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவதும். சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு எல்லாம் என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை. ஏதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சறுக்கினால் அடுத்து உடனே ஏதாவது செய்தி பரபரப்பாக பேச வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாமக ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது.

அரசியல் சூழலில் சறுக்கினால் அடுத்து உடனே ஏதாவது செய்தி பரபரப்பாக பேச வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாமக ஜெய்பீம் திரைப்படத்தை கையில் எடுத்துள்ளது என கருணாஸ் கூறியுள்ளார். 

ஞானவேல் இயக்கத்திலும் சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். படம் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், உண்மையான சம்பவத்தில் ராஜகண்ணுவை கொடூரமாக அடித்து கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியது, வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலாண்டர் இடம்பெற்றது போன்றவை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரண்டுள்ளனர்.காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுபோதிலும் பிரச்னை ஓயவில்லை. மற்றொரு புறம்  சூர்யாவுக்கு ஆதரவாக இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திரையுலக பிரபலங்களான பாரதிராஜா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இது தொடர்பாக நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது. ஆனால் வம்படியாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் பாமகவினர் அராஜகம் செய்கின்றனர். இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர். வீண்வம்பு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தங்களது சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம் பெற்றதாய் பாமகவினர் குரல் கொடுத்தனர். அதை நீக்க வேண்டும்மென வேண்டுகோள் வைத்தனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார். பிரச்சனை முடிந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் பாமகவினர் வம்படி செய்வதும், திரைப்படச் சுவரொட்டிகளை கிழிப்பதும், திரை அரங்கங்களில் படம் ஓட விடாமல் தடுப்பதும் அபத்தத்தின் உச்சம். தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவதும். சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு எல்லாம் என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை. ஏதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சறுக்கினால் அடுத்து உடனே ஏதாவது செய்தி பரபரப்பாக பேச வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாமக ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது.

அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ் சமூகத்திற்கு பங்காற்றுகிறார். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும்  படி செய்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் உறுதியாக நிற்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்த படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி நிதி தருகிறார். இப்படிப்பட்ட மனித நேயரை சமூக அக்கறை கொண்ட கலைஞனை இனி விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார். 

click me!