
தமிழகத்திற்கு தேவையான வறட்சி நிதி வழங்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஒ.பி.எஸ் கூறியதாவது:
தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினோம். அவரும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தார். மேலும் மனுவாகவும் வழங்கியுள்ளோம்.
அந்த மனுவில் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அரசுடமை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும் தெரிவித்துள்ளோம்.
அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு போதிய நிதி வழங்க வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
மருத்துவ மேற்படிப்பிற்கு 50 % இட ஒதுக்கீடு தர வேண்டும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.
காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுபடி, காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும், சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
அரசியல் ரீதியான பேச்சுக்கள் பேசவில்லை. தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.