கர்நாடகா எங்களுக்குத்தான் …. யாரோட தயவும் தேவையில்லை…  கொக்கரிக்கும்  சதானந்த கவுடா !!

First Published May 15, 2018, 10:32 AM IST
Highlights
we have full majority sadananda gowda


யாருடைய தயவும் தேவையில்லாமல் தனிப் பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

வாக்குகள் எண்ணத்துவங்கியதும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நொடிக்கு நொடி   முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது.

இதனால், தொங்கு சட்ட சபை ஏற்படக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

அண்மையில் கிடைத்துள்ள தகவலின் படி, முன்னணி நிலவரம் தெரிய வந்த 222 தொகுதிகளில் 110 இடங்களில் பாரதீய ஜனதா கட்சியும், 62 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சி 42 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகள் 2  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார். கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனவும்இ எங்களுக்கு யாருடை தயவும் தேவையில்லை என்றும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 

click me!