சூடு, சொரணை, வெட்கம், மானம் நமக்கு இருக்கிறதாலே தே.மு.தி.க.வோடு கூட்டணி வேண்டாம்: உலுக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள், ஃபைலை மூடும் எடப்பாடியார்?!

By Vishnu PriyaFirst Published Mar 9, 2019, 12:50 PM IST
Highlights

சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்தல்! என்பார்களே அதற்கு மிகத் தெளிவான உதாரணமாகியிருக்கிறார் பிரேமலதா. 2019 மார்ச் -8 பெண்கள் தினம் என்பது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகி இருக்கிறது.

சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்தல்! என்பார்களே அதற்கு மிகத் தெளிவான உதாரணமாகியிருக்கிறார் பிரேமலதா. 2019 மார்ச் -8 பெண்கள் தினம் என்பது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகி இருக்கிறது. ஆத்திரத்தில் அவசரப்பட்டு ‘நீ! வா! போ! சொல்லு!  உனக்கு தெரியுமா?’ என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து பிரேமலதா ‘கொட்டிய’ வார்த்தைகள் அவருக்குதான் மிகப்பெரிய வலியை, வேதனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகமெங்கிலும் பத்திரிக்கையாளர்கள் பிரேமலதாவை தாறுமாறாக தாளித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. மீது, அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் டார்கெட் செய்தும், 2011-ல் ஜெ., முதல்வரானதே தங்களால்தான்! என்றும் பிரேமா பேசியதை அக்கட்சியினரால் சுத்தமாக  டைஜஸ்ட் செய்ய முடியவில்லை. ’இவ்வளவு மோசமாக, திமிராக நம்மை விமர்சிக்கும் தே.மு.தி.க.வின் கூட்டணி நமக்கு தேவையே இல்லை. 

அம்மாவை அசிங்கப்படுத்திப் பேசும் பிரேமலதாவுடன் அரசியல் ஆலோசனையில் உட்காருவது நம் அம்மாவை நாமே அவமதித்த செயல்.’ என்று வெடித்திருக்கின்றனர். 


மேலும் ‘37 எம்.பி.க்கள் இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்திருக்குது? அதனால இந்த மாநிலத்தோட உரிமை காப்பாற்றப்படணும், நல்லது நடக்கணும்னா  எங்க கட்சியைன் எம்.பி. ஆகணும்.’ என்று ஜெ., பேசியதை சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தங்களுக்குள் மிக மிக வன்மையாக கண்டித்துக் கொண்டுள்ளதோடு...’தூக்கி எறியுங்க தலைவரே அந்த கட்சியை. நமக்கு வெட்க, மானம், ரோஷம், சூடு, சொரணை இருக்குதுன்னு அழுத்தமா நிரூபிப்போம்.’ என்று எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

விளைவு, நேற்று இரவே எடப்பாடியாரும் - ஓ.பி.எஸ்.ஸும்  இணைந்து பேசி ‘நம் அணியில் தே.மு.தி.க. இல்லாவிட்டால் எந்தெந்த தொகுதிகளில் நிலவரம் எப்படி இருக்கும்? ஒட்டுமொத்தமாய் என்ன விளைவு இருக்கும்?’ என்று சர்வே எடுத்துத் தர ஒரு டீமுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். 

இந்த சர்வே முடிவு தங்களுக்கு ஆறுதலான நிலையில் இருந்தால் உடனடியாக பி.ஜே.பி.யிடம் பேசி ‘அந்த கட்சி வேணாம்.’ என்று டோட்டலாக ஃபைலை மூடிவிடுவார்கள். 


ஒரு வேளை சர்வே முடிவுகள் ‘சிரமம்’ என்று சுட்டிக்காடினால் தே.மு.தி.க. தங்களுக்கு ஏன் வேண்டும்? என்று கட்சியினரை கன்வின்ஸ் செய்வதில் இரண்டு ‘பி.எஸ்.’களுக்கும் மூச்சு திணறிவிடும்.

click me!