தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுக அரசின் தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டும் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே இடப் பங்கீடு நடைபெற்று முடிந்தது. இதனை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இன்று அறிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் உத்தரவின் பேரில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய திமுக போட்டியிடும்.
7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் 3 இடங்கள், விசிக 1 இடம், சிபிஐ, சிபிஎம் தலா 1 இடம் என மொத்தம் 6 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்களில் திமுக போட்டியிடுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றோம். இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தொடர் மழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மோர்தானா அணை நிரம்பிவிட்டது. வேலூரில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் மட்டுமே முழுமையான அளவு ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். அதனால் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுக அரசின் தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டும். அதற்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று துரைமுருகன் தெரிவித்தார்.