அடி தூள்.. சிங்கபூராக மாறப்போகுது சென்னை.. உலக வங்கி 9.125 கோடி கடன். தட்டி தூக்கிய ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 2:16 PM IST
Highlights

இத்திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள நீர் வழித்தடங்களை புனரமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்குவது. வசிப்பதற்கு உகந்த இடமாக சென்னையை மாற்றுவது, எழில்மிகு சென்னையின் பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்து வண்ண விளக்குகள் ஒளிர விட்டு அழகுபடுத்துதல். 

விரைவில் உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகரத்தை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளை போல கட்டமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் மழையால் சென்னை மாநகர் வெள்ளக்காடாக காட்சி அளித்து வரும் நிலையில் இந்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் இந்தியாவின் மிகப் பழமையான நகராட்சி ஆகும். 1688  செப்டம்பர் 29 அன்று இது உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1875 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக  மாநகராட்சிகளின் வரி வருவாயில் முதல் இடத்தை கொண்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை  மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2020- 21 ஆண்டு பட்ஜெட் அறிக்கையில், சென்னை மாநகரம் நிலைத்த பொருளாதார வளர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர கூட்டாண்மை என்ற திட்டம் உலக வங்கியின் உதவியுடன் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாநகரின் போக்குவரத்து, அதைச் சுற்றியுள்ள நீராதாரங்களை மேம்படுத்துவது, நகர நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையை கட்டமைப்பை உயர்த்துவது போன்ற பணிகள் இதில் மேற்கொள்ளப்படும், சென்னை மாநகராட்சி பழமையான நகரம் மட்டுமின்றி மிகவும் அழகிய நகரம் ஆகும். இதன் நீண்ட பரந்த மணல் பரப்புடன் கூடிய மெரினா கடற்கரை அழகுக்கு அழகு சேர்பதாக உள்ளது. பல புகழ்பெற்ற கோவில்களை கொண்டதாகவும், பல உயரமான கட்டிடங்களை கொண்டதாகவும் அமைந்திருப்பதால், இதன் கவர்ச்சி பலரையும் கவர்கின்றன. இதனால் பல்வேறு வெளி மாநிலத்தினர் வெளிநாட்டினர் வந்து செல்லும் மாநகரடாக சென்னை உள்ளது.  அதேபோல் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் சிறந்த நகரமாக சென்னை விளங்குகிறது. மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே, மாநகர் போக்குவரத்து கழகம் மிக சிறப்பான கட்டமைப்பு பெற்றுள்ளது. ஆனால் நாளுக்க நாள் மக்கள் தொகு அதிகரித்து வருவதால் அவைகளும் போதுமானதாக இல்லை. 

எனவே சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்போதுள்ள போக்குவரத்து கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்யவும், அனைத்து துறைகள் மற்றும் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து நிதி ஆதாரங்களை பகிர்ந்தளித்து வரும் அமைப்பாக மாற்றப்பட உள்ளது. அதேபோல அடிக்கடி சென்னையில் ஏற்பட்டுவரும் வெள்ள பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் மேம்படுத்தப்படும், சென்னை மாநகரத்தின் சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மழைநீர் வடிகால் கட்டமைப்பு,  உலகத் தரத்திலான சாலைகள், அனைவருக்கும் கல்வியை உறுதி செய்யும் வகையில் கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்துவது என பல்வேறு  வளர்ச்சி திட்டங்களுக்காக உலக வங்கியிடம் 9, 125 கோடி ரூபாய் கடன் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையை உலகத்தரத்திற்கு மாற்றும் வகையில் மாநகர கட்டமைப்புகளை உருவாக்க சி.சி.பி திட்டத்திற்கு உலக வங்கி கடன் அளிக்க உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், உலக அளவில் நான்காவது பொருளாதார வளர்ச்சியுடைய நகரமாக சென்னை உள்ளது. சென்னை மாநகர் 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது, இங்கே 1.09 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். 
மேலும் சென்னை மாநகரத்தை தரம் உயர்த்த அந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும், 2026 ஆம் ஆண்டுக்குள் மேம்பட்ட கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் நிதியில் 30 சதவீத பணிகள் முடித்தபின் உலகவங்கி 9,125 கோடி ரூபாய் வழங்க உள்ளது. இத்திட்டம் முழுமை பெற்றால் சென்னை தற்போது சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் இருந்து மீளும். பெருமளவில் வாகனப் போக்குவரத்து குறைந்து மாசு கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக மழைநீர் கட்டமைப்பு, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் களையப்படும். அனைவருக்கும் தரமான கல்வி சுகாதாரம் கிடைக்கும், அதே போல் மாநகரத்தின் தரம் உயரும் போது, முதலீடுகளும் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னை மாநகரின் வருவாய் இதனால் பன்மடங்கு அதிகரிக்கும். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு நிகராக சென்னை திகழும் என அவர் கூறினார். 

இதேபோல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் மீண்டும் சென்னையை சிங்காரச் சென்னையாக்குவோம் என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளது. தமிழக முதல்வர் பெருநகர சென்னை மாநகரில் இணைக்கப்பட்ட பகுதியில் அடிப்படையில் அதன் கட்டமைப்புகளை  மேம்படுத்துவதில் சரியான முன்னேற்றம் இல்லாததால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சர்வதேச தரத்துக்கு சென்னையை உயர்த்தவும் சென்னை 2.0 இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 2021 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக  நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியான முன்னேற்றம் இல்லாததால் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும், சிங்கார சென்னை திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அத்துறை அமைச்சர் அறிவித்தார். இதன் மூலம்  பல்வேறு திட்டங்களை இணைத்து உட்கட்டமைப்பை  பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள நீர் வழித்தடங்களை புனரமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்குவது. வசிப்பதற்கு உகந்த இடமாக சென்னையை மாற்றுவது, எழில்மிகு சென்னையின் பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்து வண்ண விளக்குகள் ஒளிர விட்டு அழகுபடுத்துதல். சாலைகளை இணைத்து மேம்படுத்துதல், சூகதாரமுள்ள பொது  கழிப்பறைகளை அமைத்தல்,  விரிவுபடுத்தப்பட்டுள்ள மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து, ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைத்தல் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!