அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறோம்.. நல்ல முடிவு வரும்- வி.பி.துரைசாமி

By Ajmal KhanFirst Published Oct 3, 2023, 11:22 AM IST
Highlights

அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்த பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, நல்ல செய்தி வரும் என கூறியுள்ளார். 

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

பாஜகவுடன் அதிமுக கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்தக் கூட்டணி முறிவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் காரணம் என அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.  அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியது முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

அங்கு பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களையும் அடுத்தடுத்து சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் அதிமுகவுடன் கூட்டணி முறிவு தொடர்பாகவும் கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

பாஜகவின் திட்டம் என்ன.?

இதனை அடுத்து இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்தும் தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் அடுத்ததாக செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும்  அதிமுகவுடன் மீண்டும் சமரச பேச்சு தொடங்கலாமா.? அல்லது ஓபிஎஸ்,டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்து தனி அணியை உருவாக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.?

பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில், சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கூட்டம் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 8 மண்டல பொறுப்பாளர்கள், செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது தொகுதி நிலவரம் எப்படி உள்ளது, பாஜக ஆதரவு நிலைப்பாடு, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் சென்னை பாஜக அலுவலகம் வந்த மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியிடம்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திதுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,    நல்ல முடிவு கிடைக்கும், நீங்கள் சந்தோஷம் படும்படியாக முடிவு கிடைக்கும் என கூறினார். அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அதிமுக- பாஜக கூட்டணி நீடிப்பதற்காகத்தான் பெரியவர்கள் எல்லாம் பேசிவருகிறார்கள். நல்ல படியாக முடியும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜகவை விட்டு விலகுவதும், உடலில் கொள்ளிகட்டையை வைப்பதும் ஒன்று தான்; பழனிசாமிக்கு தினகரன் எச்சரிக்கை

click me!