தி.மு.க.வுக்குதான் ஓட்டுப்போடுவோம்...! இரட்டை இலையில் ஜெயித்த எம்.எல்.ஏ.வின் கெத்து பேச்சு..!

By Vishnu PriyaFirst Published Mar 21, 2019, 6:20 PM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தந்த அமோக ஆதரவினால் மிகவும் துணிச்சலாம கூட்டணியே இன்றி கடந்த 2016 தேர்தலில் நின்றார் ஜெயலலிதா. கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி ஆகியோரை மட்டும் சில கணக்குகளுக்காக கூட்டணி சேர்த்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தந்த அமோக ஆதரவினால் மிகவும் துணிச்சலாம கூட்டணியே இன்றி கடந்த 2016 தேர்தலில் நின்றார் ஜெயலலிதா. கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி ஆகியோரை மட்டும் சில கணக்குகளுக்காக கூட்டணி சேர்த்தார்.

அவர்களை தனது இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைத்து ஜெயிக்கவும் வைத்தார். இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் புண்ணியத்தால் மட்டுமே எம்.எல்.ஏ. ஆனவர்கள். ஜெ., மறைவுக்குப் பின் கட்சி உடைந்து ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது இந்த மூன்று கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு யாருக்கு? என்று பரபரப்பாக பேசப்படும். ஆயிரம் தடைகளை தாண்டி இவர்கள் மூவரும் ஒற்றுமையாகதான் இருந்தனர். ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியோ இந்த ஒற்றுமையை பிரித்துவிட்டது. 

பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க.கூட்டணி வைத்துவிட்டதால் தமீமுன் அன்சாரி வேறுபட்டு நிற்க, சசியின் ஆதரவாளரான கருணாஸோ மர்மமாய் நிற்கிறார். ஆனால் தனியரசுவோ சாஷ்டாங்கமாக மோடியின் காலில் விழாத குறையாக கூட்டணிக்கு ஆதரவு சொல்லி மேடையும் ஏறிவிட்டார். 
இந்நிலையில் தமீமுன் அன்சாரியோ ‘ஆமாங்க நாங்க சூரியனுக்குதான் ஓட்டு போடுவோம்’ என்று அதிரடியாக பேசி, அ.தி.மு.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இப்படி...

 

“பழைய நன்றிகளை நாங்க என்னைக்கும் மறக்கலை. ஆனால் அரசியல் கட்சிக்கு கொள்கை நிலைப்பாடு மிக முக்கியம். அரசியலில் மிக சின்னதான சமரசங்களை செய்து கொள்ளலாம் தப்பில்லை, தவிர்க்க முடியாதவை. ஆனால் பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும், நெருக்கடிக்கு பயந்தும் ஒட்டுமொத்த சித்தாந்தத்தையும்  மறந்து, மக்கள் நலனுக்கு எதிராய் போவதென்பதை எப்படி ஏற்க, ஆதரிக்க முடியும்?இரட்டை இலையில் நின்று வென்றேன் தான். ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும், இப்போது இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் தங்கத்துக்கும் வெள்ளிக்கும் இடையிலான வித்தியாசம்போல் உள்ளது. ஜெ., துணிச்சலாக முடிவெடுத்து அசத்தினார். ஆனால் இவர்களோ யாருக்கோ பயந்து பயந்தே ஆட்சியை நடத்துகின்றனர். 

எங்களின் ஒரே நோக்கம் மோடியின் சர்வாதிகார ஆட்சியை சாய்க்கவேண்டும். ராகுல் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அந்த வகையில் ஓட்டுக்கள் சிதறிடாமல் பாதுகாக்க கவனம் செலுத்துகிறோம். ஆம், தமிழகத்தில் தி.மு.க. வேட்பாளருக்குதான் வாக்களிப்போம். எங்களின் களப்பணி இதை நோக்கித்தான் இருக்கும்.” என்று  அதிரடியாய் போட்டுத் தாக்கியிருக்கிறார். 

எதிர்வரும் நாடாளுமன்றத்தோடு சேர்த்து பதினெட்டு தொகுதிகளில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள படாதபாடு படுகிறார் எடப்பாடியார். இதற்காகத்தான் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.விடம் ஏகத்துக்கும் இறங்கி பேசிக் நட்பாய் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இரட்டை இலையில் நின்று ஜெயித்த அன்சாரி இப்படி ‘உதயசூரியனுக்கே எங்களின் ஓட்டு.’ என்று பேசியிருப்பது எடப்பாடியாரை கையை பிசைய வைத்துள்ளது.

click me!