
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகார மையமாக திகழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போயஸ் கார்டன் பகுதி முழுவதும் போலீசாரால் சூழப்பட்டிருக்கும்.
ஜெயலலிதா மறைந்த பிறகு போயஸ் கார்டன் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்பொழுது சிலர் மட்டுமே பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிகார மையமாகவும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோவிலாகவும் திகழ்ந்த போயஸ் கார்டன் வீட்டிற்குள் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தியது அதிமுக தொண்டர்களிடையேயும் ஜெயலலிதாவின் விசுவாசிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
நேற்றிரவு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால், போயஸ் கார்டன் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்கள், பாஜகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போயஸ் கார்டன் வீட்டில்தான் விவேக் வளர்ந்தார். அந்த உரிமையில், வீட்டிற்கு வந்தவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளாக இருந்தபோதிலும் கூட, அவர்கள் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, தனது விருந்தோம்பல் பண்பினை காட்டியுள்ளார் விவேக்.
ஆனால், அதிகாரிகள் தரப்பிலான எதிர்பார்ப்பு டீ, காபி அல்ல; ஒத்துழைப்பே என தெரிவித்துவிட்டனர்.