ஆதரவு கேட்க சென்ற திமுக வேட்பாளர் மீது கல்வீச்சு.. ஸ்டாலினுக்கே அதிர்ச்சி கொடுத்த விருகம்பாக்கம் தனசேகரன்..!

By vinoth kumarFirst Published Mar 12, 2021, 4:58 PM IST
Highlights

தனசேகரனுக்கு விருகம்பாக்கம் தொகுதி  ஒதுக்காததால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனசேகரனுக்கு விருகம்பாக்கம் தொகுதி  ஒதுக்காததால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று  முதல் தொடங்கி  மார்ச் 19ம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2016ல் திமுக தோற்றதுக்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. முதல் காரணம், கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்தது, இரண்டாவது தவறான வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. திமுக சார்பிலும், கூட்டணி சார்பிலும் பலவீனமான வேட்பாளர்கள் களமிறங்கியதால் பல இடங்களில் திமுக கூட்டணி பலத்த அடி வாங்கியது. ஆகையால், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் திமுகவினர் அதிக கவனம் செலுத்தி வந்தனர். 

இந்நிலையில், 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதில், விருகம்பாக்கம் தொகுதியும் அடங்கும். 2011, 2016 தேர்தல்களில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட்டவர் தனசேகரன். தொகுதியில் செல்வாக்கானவராக இருந்தாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வி. என். விருகை ரவியிடம் 2,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 

ஆகையால், இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர்ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், தனசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில், ஆதரவு கேட்டு சால்வை அணிவிக்க அவரது வீட்டுக்கு வந்த திமுக வேட்பாளர் பிரபாகரராஜாவின் காரை கற்களால் அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!