
அமைச்சர் விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர் என கூறப்படும் நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் இன்று தனது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார் .
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு உள்ளிட்ட தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பிரமுகர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர் நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணியன் வீட்டிலும் கோவை மண்டல வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 7 ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுப்பிரமணியன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை மோகனூரில் சுப்பிரமணியன் தனது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானவரிதுறை கைப்பற்றிய ஆவணங்களுக்கு பயந்து சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.