அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார். எனது கருத்தை மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புரிந்து கொண்டுள்ளார் என்று விஜயதரணி கூறியுள்ளார்.
தினகரனை, நேற்று முன்தினம், காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி சென்னையில் சந்தித்தார். தினகரன் மாமியார் இறந்தது தொடர்பாக துக்கம் விசாரிக்க சென்றதாக, விஜயதாரணி தெரிவித்தார். அப்போது, 'அ.தி.மு.க.,வினர் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான், அக்கட்சியை காப்பாற்ற முடியும்' என்றும், கருத்து தெரிவித்தார். இதற்கு, குமரி மாவட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்கள், பிரின்ஸ், ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'துக்கம் விசாரித்த விஜயதாரணி, தினகரன் தலைமையை, பழனிசாமியும், பன்னீர் செல்வமும் ஆதரிக்க வேண்டும் என்ற தொனியில் பேசியிருக்க கூடாது; அவர் மீது காங்., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து விஜயதாரணி கூறியதாவது: ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத பா.ஜ., தமிழக சட்டசபையை கட்டுப்படுத்துகிறது; அதன் மூலம், அ.தி.மு.க.,வை அழிக்க பார்க்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கட்சிகளை அழித்து விட்டு ஆட்சியை பிடிக்க, பா.ஜ., துடிக்கிறது. எனது கருத்தை, மாநில தலைவர் திருநாவுக்கரசர் புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.