தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், “முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக 3,780 பேர் மரணமடைந்துள்ளனர்.மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆகும். சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து புதிதாக 3,38,439 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே, 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 ஆக உள்ளது.
இந்தியாவில் இப்படி நாளுக்கு நாள் கொரோனா தீவிரமாக பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் மே 20ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும் அங்காங்கே முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது. கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து,ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.