
தனியார் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த விருது விழாவில் 'Samrat of South Indian Box Office' என்ற விருது விஜய்க்கு வழங்கப்பட்டது.
இயக்குநர் மகேந்திரன் கையால் இவ்விருதைப் பெற்றுக் கொண்டு தன் படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய். விவசாயிகளின் பிரச்னை குறித்தும் குறிப்பிட்டார். நான் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். நாம் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகள் இன்று நன்றாக இல்லை. உழைப்புக்குக் கிடைத்த பலனாக இங்கு பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டன.
ஆனால், எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர் விவசாயி. பசியை எளிதாகக் கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை என நினைக்கிறேன். காசு கொடுத்தால் கூடச் சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது என்ற நிலை வந்தால் மட்டுமே நாம் விவசாயிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய நிலையைப் புரிந்து கொள்வது அவசியம் என்பதை விட அவசரமும் கூட. இப்போது கூட நான் முழித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த சந்ததிக்கு அதுகூடக் கிடைக்காது.
ஒரு ஜவுளிக்கடை முதலாளி இன்னொரு ஜவுளிக்கடைக்குச் சென்று துணி எடுக்க முடிகிறது, ஒரு நகைக்கடை முதலாளி இன்னொரு நகைக்கடைக்கு சென்று நகை வாங்க முடிகிறது. ஆனால், ஒரு விவசாயி மட்டும் தான் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறான். ஏனென்றால் இலவச அரசிக்காக. வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள் என்று மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசி மற்றவர்களை யோசிக்கவைத்துவிட்டார்.