குஜராத் முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி... தேர்வு செய்தனர் எம்.எல்.ஏ.,க்கள்!

First Published Dec 22, 2017, 5:09 PM IST
Highlights
vijay rupani and nithin patel selected for cm and deputy cm in gujarat by mlas


குஜராத் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விஜய் ரூபானி மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும்,  துணை முதல்வராக நிதின் படேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை அடுத்து,  அவர்கள் இருவரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.  

குஜராத்தில் பாஜக., வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி, வாக்கு எண்ணிக்கையின் போது சற்று பின்தங்கியிருந்தாலும் பின்னர் முன்னேறி, ஒருவழியாக வெற்றி பெற்றார். 
இதனால், முதலமைச்சர் விஜய் ரூபானியே அடுத்த முறையும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கூறப்பட்டது. 

இருப்பினும், திடீரென குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பாஜக., ஆய்வு செய்ததாகவும்,  தேர்தலில் பெரும்பான்மை பெற்றாலும் 100 தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாமல் 99 தொகுதிகளை மட்டுமே கட்சி கைப்பற்றியதும் கட்சியினரால் அலசப் பட்டது. 

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முந்தைய தேர்தலில் 115 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ.க இந்த முறை பல தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்தது. இதனால் விஜய் ரூபானி மீண்டும் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு குறித்து சந்தேகம் தெரிவிக்கப் பட்டது. 

இதனிடையே புதன்கிழமை குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச முதல்வர்களைத் தேர்வு செய்ய பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடியது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப் படவில்லை. எனவே, வரும் ஞாயிறு முதலமைச்சர்கள் குறித்து  அறிவிக்கப்படலாம் என்றும், திங்கட்கிழமை புதிய அரசு இரு மாநிலங்களிலும்  பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆலோசித்து, மீண்டும் இருவரையும் முதல்வர் துணைமுதல்வர் பதவிக்கு தேர்வு செய்துள்ளதாக அருண் ஜேட்லி அறிவித்தார். 

மேலும் ஏற்கெனவே அறிவித்த படி, டிசம்பர் 25ஆம் தேதி அவர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

 

click me!