ஜெயலலிதா மறைவு, கலைஞர் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரையில் விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ரசிகர்கள் சார்பாக நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப்போவதாக 'தின விஜய்' இதழின் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில்... "நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22 அன்று அவர் முக்கிய முடிவு எடுக்கிறார் “ஜோசப் விஜய்” என, தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இந்த மாதம் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருவதால் தற்போது மீண்டும் மதுரை விஜய் ரசிகர்கள் விஜய் அரசியல் குறித்த சர்ச்சை போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த போஸ்டரில், "தமிழர்களின் போராட்டம் தொடர்கதை.. எங்கள் தளபதி மாற்றிடுவார் அதை, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே, தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு, மக்கள் நலன் காக்க, மக்கள் குறை தீர்க்க, நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வரே, என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.