
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக இருந்த நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிராகரித்துள்ளார். விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டுள்ளதற்காக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.
சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்யும் அதே நேரத்தில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் அவருக்கு எதிராக சேரன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராக வந்த பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியிருந்தார். நேற்று மாலை முதல் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் சேரன் உள்ளிட்ட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ஜெ.தீபாவின் மனுவில் படிவம் 26ஐ பூர்த்தி செய்யவில்லை என நிராகரிக்கப்பட்டது. நடிகர் விஷாலின் வேட்புமனு, தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அப்போது, விஷால் அளித்துள்ள உறுதிமொழி, சொத்து கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என்று கூறி அதிமுக மற்றும் திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்துள்ளார். விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டுள்ளதற்காக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.