
அரசுக்கு இணையாக ஆதரவு அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையில் வைத்திருக்கிறார். அதனால் தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கவில்லை. நிலவரத்தை முன்பே அறிந்து கொண்டு முக்கிய ஆவணங்களை அவர் ரகசிய இடத்தில் வைத்துள்ளார் என கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்கூட்டியே முன்னாள் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு தகவல் சென்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், தொடர்புடையவர்கள் ஆகியோரது இடங்களில் சென்னை, கோவை திண்டுக்கல் உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தப்போவது எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விராணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்ள முற்பட்டபோது அதிமுக நிர்வாகிகள் கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சோதனை மேற்கொண்டால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முன் கூட்டியே அறிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்போது சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் தங்காத வேலுமணி, நேற்று அதிகாலையிலேயே விடுதிக்கு வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சோதனை நடக்கப்போவதை தெரிந்துகொண்டு, பணம் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும். இதனால்தான் 60 இடங்களில் சோதனை நடத்தியும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சோதனையை முன் கூட்டியே வேலுமணி தரப்பிடம் வெளிப்படுத்திய போலீசார் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு சீக்ரெட்டாக வைத்திருந்தும் வேலுமணி தரப்புக்கு இந்த விவகாரம் முன் கூட்டியே சென்றதால் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.