28 வருடங்களாக சிறையில் அவதிபடும் இஸ்லாமிய கைதிகள்.! கருணாநிதி பிறந்தநாளில் விடுவித்திடுக..!-வேல்முருகன்

By Ajmal KhanFirst Published Mar 19, 2023, 8:49 AM IST
Highlights

இசுலாமிய சிறைவாசிகள் உள்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் இஸ்லாமிய கைதிகள்

பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுள் தண்டனை என்பது சட்டப்படி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்றாலும், அச்சிறைவாசிகளின் தண்டணையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முழுமையாக அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. குற்றவியல் சட்டம் 432 அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கு ஒன்றிய அரிசன் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்பிரிவு 161ன் அடிப்படையில் முன் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், மாநில அரசுகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு உரிமை உண்டு. 

அண்ணாமலை வருங்காலத்தில் நிச்சயம் தமிழக முதல்வராவார்... திருச்சி சூர்யா ஆருடம்!!

28 வருடங்களாக அவதிபடும் கைதிகள்

இருபது ஆண்டுகள் சிறைவாசம் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு முன் விடுதலை திட்டத்தை 1994இல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் முன் விடுதலை செய்ய முடியும்.முக்கியமாக, ஒரு மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு என்ற பல நிகழ்வுகளில் பத்து ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழ்நாட்டின் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.2008ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் நான் (தி.வேல்முருகன்) வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு  முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 1,400 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

பரோலும் இல்லை

எம்.ஜி.ஆரின் 100வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்த 1,627 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அப்போது சில இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை என்பது வேதனைக்குரியது.தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் 38 இசுலாமிய சிறைவாசிகள், 27 முதல் 28 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட, இசுலாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலர் 60 வயதைக் கடந்தவர்களாகவும் நோயாளிகளாகவும் உள்ளனர். சிறையில் இருந்து வந்தாலும் நல்ல உடல்நலனோடு அவர்கள் வாழ முடியாது. அவர்களது எஞ்சிய வாழ்நாளையாவது குடும்பத்துடன் செலவிட விரும்புகிறார்கள். 

கருணாநிதி பிறந்தநாளில் விடுவிக்கனும்

எனவே, கடந்த காலங்களில் சிறைவாசிகள் விடுதலையில் நிகழ்த்தப்பட்ட பாராபட்சங்கள் கடந்து இசுலாமிய சிறைவாசிகள், 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில்,  கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய, மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, நிறைய இசுலாமிய சிறைவாசிகள் குற்றம் செய்யாமலேயே நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றனர். இதனை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு, இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்,

இதையும் படியுங்கள்

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்..! குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை அறிவிக்கப்படுமா.? புதிய திட்டங்கள் என்ன.?
 

 

click me!