பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக வேலூர் மக்களவை மற்றும் 2 சட்டமன்ற இடைத் தேர்தல்கள் ரத்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையமும், ‘கோல் குயிஷ்’ நிறுவனமும் இணைந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வினாடி-வினா போட்டி நடத்தியது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பறக்கும் படைக்குழுவினர், வருமான வரித்துறை உள்பட அனைத்து துறைகளுடனும் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து முடிவு செய்து, இந்திய தேர்தல் ஆணையம் என்ன விதிமுறைகள் அளித்து இருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வருமான வரித்துறையும் தகவல் கொடுத்து இருக்கிறது.
அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன்பிறகு, அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து தகவல்களையும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி கொண்டுதான் இருக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்..