வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாத இறுதியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தைக் குறிவைத்து சோதனை நடத்தியது வருமான வரித் துறை.. அவரது தந்தை துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10.50 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து கடந்த 1ஆம் தேதியன்று துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டது வருமான வரித் துறை. அப்போது 11.48 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
அதில் வேலூர் தொகுதியில் எந்நெதப் பகுதிக்கு வாக்காளர்களுக்கு பணம் தர வேண்டும் என்ற சிலிப்புகள் ஒட்டப்படிருந்தன. இதனால் அது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து இந்த ரெய்டு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு , மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.