சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கை.. மன்சூர் அலிகானுக்கு ஆப்பு..? காவல் ஆணையர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 19, 2021, 1:00 PM IST
Highlights

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெறப்பட்ட புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இரவு நேர ஊரடங்கின் போதும், முழு ஊரடங்கின் போதும் சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவ அவசரத்திற்காக வாகனங்கள் இயங்கும் பட்சத்தில் சோதனைக்குப்பின் அனுமதி வழங்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அனைவரும் முகக்கவசங்களை அணிவதோடு, தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்றார். 

மேலும், பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து அரசு வழங்கியுள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், அப்போதே அனைவரும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், மக்களின் பாதுகப்பை உறுதி செய்ய காவல்துறை அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர் என்ற அவர், நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் எனவும், இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 12 ஆயிரம் காவல்துறையினருக்கு தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், காவல்துறை சார்பில் சென்னையில் 200 இடங்களில் கொரோனா தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெறப்பட்ட புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 12 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் அரசு புதிதாக வழங்கியுள்ள உத்தரவிற்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார். இரவு நேர ஊரடங்கின் போதும், முழு ஊரடங்கின் போதும் சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவ அவசரத்திற்காக வாகனங்கள் இயங்கும் பட்சத்தில் சோதனைக்குப்பின் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், முழு ஊரடங்கிற்கு முதல் நாள் பொதுமக்கள் இறைச்சி கடைகள், மீன் சந்தைகள், காய்கறிக் கடைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அவர், தனிமனித இடைவெளியுடனேயே முகக்கவசம் அணிந்து அனைவரும் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் எனவும், வாரத்தில் ஒருநாள் மட்டுமே முழு ஊரடங்கு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 
 

click me!