தனிப்பெருங்கருணை நாள் அறிவிப்பு.. வள்ளலாரியத்தை பரப்பும் நோக்கம்.. முதல்வர் ஸ்டாலினை மெச்சும் திருமா!

By Asianet TamilFirst Published Oct 7, 2021, 9:00 PM IST
Highlights

வள்ளலாரியத்தைப் பரப்பும் நோக்கில் அவரது பிறந்தநாளை தனிப்பெரும்கருணை நாளாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

வள்ளலார் பிறந்த தினம் இனி ‘தனிப்பெருங்கருணை’ நாள் என்றழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அதில், “கடவுள்-சாத்தான், சாதி-மதம், சடங்கு-சம்பிரதாயம் என போதனைகள் செய்யாமல், அகத்தில் பொங்கும் அருள் என்பதுதான் அறியாமை என்னும் இருளைப் போக்கும் பேரொளி என போதித்தவர் வள்ளலார். 
அருள் என்பது  கருணை என்னும் உயரிய மாண்பே என உரைத்தவர். கருணையே அருள்; அருளே ஒளி என ஆன்மநேயம் பரப்பியவர். அந்த ஒளியே கடவுள் என்பதைத்தான் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என போதித்து மானுடத்துக்குப் புதியவழி காட்டியவர். அன்பு பெருகினால் கருணை. கருணை பெருகினால் அருள். அருள் என்பதுபேரொளியாய் பரவும். அது எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காது. அனைத்து உயிர்களையும் நேசிக்கும். அதுவே ஆன்மநேயம்.
அத்தகைய வள்ளலாரியத்தைப் பரப்பும் நோக்கில் அவரது பிறந்தநாளை தனிப்பெரும்கருணை நாள் என அறிவித்துள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலினுக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.” என்று திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

click me!