
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவியை 'லேடி கவர்னர்' என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு வருவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி தனது மனைவியுடன் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் மற்றும் லேடி கவர்னர் தரிசனம் மற்றும் பூஜை செய்து, தமிழக சகோதர சகோதரிகளின் நலனுக்காகவும் பாரத மாதாவின் மேன்மைக்காகவும் வேண்டிக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்கும் ஆளுநர் மாளிகை, அவரது மகனை,பேரனை எப்படி அழைக்கும்? என வன்னி அரசு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநரின் வாடிக்கை: அமைச்சர் ரகுபதி
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- மக்களாட்சி கோட்பாடு அடிப்படையில் ஆளுநர் என்பதே தேவையில்லாத ஒரு பதவி என பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளும் விவாதங்களும் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் எதிர்ப்பு என்பது கடவுள் எதிர்ப்பை போலவே கோட்பாட்டு வலிமையாகவே தொடர்கிறது.
இதையும் படிங்க;- தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஆளுநர் பணி செய்வதற்காக நியமிக்கப்பட்ட திரு.ரவி அவர்கள், வந்த வேலையை மறந்து விட்டு அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். சனாதனம், குழந்தை திருமணம் குறித்து பெருமை படுவது, ராம ராஜ்யம் அமைப்போம் என்பது, தமிழ்நாட்டை தமிழகமாக சிறுமைப்படுத்துவது என தொடர்கிறது ரவியின் போக்கு. சமீபகாலமாக போகிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியையும் அழைத்துச் செல்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், அவருடைய மனைவிக்குமான செலவினங்களும் தமிழ்நாடு அரசையே சாரும். அது கூட பரவாயில்லை.
ஆனால், ஆளுநர் மாளிகை தொடர்ந்து ரவி அவர்களின் மனைவி திருமதி லட்சுமி ரவி அவர்களை குறிப்பிடும் போது #லேடி_கவர்னர் என குறிப்பிட்டு வருகின்றது. கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்க அரசியலமைப்புச்சட்டம் வழி காட்டியுள்ளதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மனைவியை லேடி_முதல்வர் என எந்த மாநிலத்திலாவது அழைக்கிறார்களா? எதற்காக ஆளுநர் மாளிகை இப்படியான மலிவான அரசியலை செய்கிறது? கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்கும் ஆளுநர் மாளிகை, அவரது மகனை,பேரனை எப்படி அழைக்கும்? ஆளுநர் மாளிகையின் அதிபுத்திசாலித்தனத்தைக் கண்டு சனநாயகமே சிரிக்கும் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.