ஆண்டாள் குறித்த அவதூறு பேச்சு... மன்னிப்பு கோரிய கவிஞர் வைரமுத்து!

First Published Jan 9, 2018, 3:46 PM IST
Highlights
vairamuththu express his sorrow for his speech about andal


கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜபாளையத்தில் ஒரு நாளிதழ் சார்பில் தமிழ் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, கவிஞர் வைரமுத்து சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார் என்று தமிழகம் முழுதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் மேடையில் பேசியபோதே அதிருப்தியுடன் சிலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதே பேச்சு, மறு நாள் அந்த நாளிதழில் முழுப் பக்க கட்டுரையாகவும் வந்தது. இதனால் அதைப் படித்த பலரும் கொந்தளித்துப் போயினர். 

இந்நிலையில் இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்துவுக்கு  பாஜக., செயலர் ஹெச்.ராஜா உள்பட  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தாம் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டு டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் வைரமுத்து.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று என்ற தலைப்பிட்டு அவர் தெரிவித்துள்ள கருத்து....
புண்படுத்துவது என் நோக்கமன்று
தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். 

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.. என்று கூறியிருக்கிறார் வைரமுத்து. 
 

click me!