எம்.பி பதவியை சரியாக பயன்படுத்திய வைகோ..!! தமிழர்களுக்கு செய்த காரியம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 19, 2020, 3:09 PM IST
Highlights

வளைகுடாவில் இறந்தவர்களின் உடல்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் முயற்சியால் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது

வளைகுடாவில் இறந்தவர்களின் உடல்கள் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ அவர்களின் முயற்சியால் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- கோவில்பட்டி அப்பனேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிரகாஷ் திருப்பதி ஓமன் (மஸ்கட்) நாட்டில் உயிர் இழந்தார் என்ற தகவல் கழகப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர், வெளியுறவுத் துறை மூலமாக உடலைத் தாயகம் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டார். 

பிரகாஷ் திருப்பதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தமது கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பிரகாஷ் திருப்பதி உடல் 18.06.2020 காலை சென்னை வான் ஊர்தி நிலையம் வந்து சேர்ந்தது. உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டு. சொந்த ஊருக்குச் சென்றனர்.பிரகாஷ் திருப்பதி மரணம் குறித்து உரிய விசாரணைகள் நடைபெற்று வருகிறது என ஓமனில் உள்ள இந்தியத் தூதர் வைகோவிற்கு விளக்கம் அளித்து மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். 

அதேபோல ஓமன் நாட்டில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த, கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, 12 நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். வைகோ அவர்களின் முயற்சியால், அவரது உடல் நேற்று மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. பெரம்பலூர் மாவட்டம் - குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த மதுரை வீரன், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அபுதாபியில் இயற்கை எய்தினார்.அவரது உடலைக் கொண்டு வருவதற்கும் வைகோ அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதனையடுத்து மதுரைவீரன் உடல் வருகிற ஜூன் 26ஆம் தேதி சென்னை வரவுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!