
தேசத்துரோக வழக்கில் சிறையில் உள்ள வைகோ ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நான் குற்றம்சாட்டுகிறேன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வைகோ, விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் வைகோ கைது செய்யப்பட்டு அண்மையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி வைகோ சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.