
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக அதிமுக ஆட்சியில் ஊழல்கள் மலிந்து கிடப்பதாக குற்றம்சாட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அவர்கள் தங்களை திருத்திக் கொண்டால்தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆட்சியில் தொடர முடியும் என்று எச்சரித்தார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய , தமிழிசை, தமிழக அரசை பாஜக இயக்குவதாக கூறுகிறார்கள், ஆனால் உண்மையிலேயே பாஜக இயக்கினால் இன்று தமிழகத்தில் ஓர் ஊழலற்ற நிர்வாகம் இருந்திருக்கும் என தெரிவித்தார்.
கடந்த ஓராண்டாக தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், இதே நிலை நீடித்தால் மக்கள் அதிமுகவை புறக்கணித்து விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அடுத்த 4 ஆண்டுகளும் ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமா அல்லது தேர்தல் வருமா என்பதை அதிமுகவினரின் செயல்பாடுகளே தீர்மானிக்கும் என தமிழிசை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ரஜினி அரசியலுக்கு வந்தால் அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் தமிழிசை தெரிவித்தார்.