Urban Election : வேட்பாளர் பட்டியல் ஜெட் வேகத்தில் ரிலீஸ்.. அவசரத்தில் கமல்.. மய்யத்தில் நடப்பது என்ன?

By Asianet TamilFirst Published Jan 21, 2022, 9:21 AM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் தேதியே அறிவிக்கப்படவில்லை. ஆனால், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஜெட் வேகத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, வேட்பாளர்களை அறிவித்து அதிரடித்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் தேதியே அறிவிக்கப்படவில்லை. ஆனால், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஜெட் வேகத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் வெளிப்படும் அரசியல்வாதியாகவும் மற்ற நேரங்களில் ட்விட்டரில் கருத்து பதிவிடுவதோடு கமல் நின்றுவிடுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதையெல்லாம் தூர தூக்கிப் போட்டுவிட்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறார் கமல். தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை வேகவேகமாக கமல்ஹாசன் அறிவித்து வருகிறார்.

முதல் கட்டமாக கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிவித்திருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கோவையில் மக்கள் நீதி மய்யம் கணிசமாக வாக்குகளைப் பெற்றது. மேலும் கோவை தெற்கு தொகுதியில் கமல் தோல்வியடைந்தாலும், கடைசி வரை பெரிய கட்சிகளை தவிக்கவிட்டார். இப்படி ஆதரவு தரும் கோவையிலிருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணியைக் கமல் தொடங்கியிருக்கிறார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மநீமவில் இருந்த மருத்துவர் மகேந்திரன் திமுக முகாமுக்கு மாறிவிட்டார். அவரால்தான் கோவையில் மநீமவுக்கு வாக்குகள் கிடைத்தன என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையிலும் தன்னால்தான் வாக்குகள் கிடைத்தன என்பதை நிரூபிக்கவும் கமல் கோவை மாநகராட்சியிலிருந்து வேட்பாளர் அறிவிப்பைத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள் மய்யத்தில்.

அதைத் தொடர்ந்து சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சிகள், போடி நாயக்கனூர் நகராட்சிக்கும் முதல் கட்டமாக வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டுள்ளார். மேலும் ஏற்கெனவே கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மநீம வேட்பாளர் சிலரை திமுக, அதிமுக கட்சிகள் விலைக்கு வாங்கின. சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரு சில காட்சிகள் அரங்கேறின. இதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடக்கலாம் என்ற எண்ணம் கமலுக்கு உண்டு. முன்கூட்டியே யாராவது விலை போவதுபோல் தெரிந்தால், அவர்களை மாற்றிவிட்டு, வேறு வேட்பாளர்களை அறிவிக்கும் திட்டமும் கமலுக்கு இருப்பதாக மய்யத்தில் பேசப்படுகிறது. அதனால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் கமல் முனைப்புக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

 நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஊரகப் பகுதிகளைவிட நகர்ப்புற பகுதிகளில் மநீம கூடுதல் வாக்குகளைப் பெற்றன. எனவே, இந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் கணிசமாக வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பிலும் கமல் இருக்கிறார். முடிந்த அளவுக்கு வேகமாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, கொரோனா தொற்று பரவலுக்கேற்ப பிரசாரம் செய்யவும் கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும் மக்கள் நீதி மய்யத்தினர் தெரிவிக்கிறார்கள்.

click me!