
மீண்டும் ஒரு மத்திய அமைச்சர் முதலமைச்சராகிறார்…பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி…
உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அம்மாநில பாஜக எம்எல்ஏ க்கள் இன்று மாலை தேர்ந்தெடுக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் பாஜக வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சர் பதவிக்கு மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா, மாநில பா.ஜனதா தலைவர் கே.பி.மவுர்யா, யோகி ஆதித்யநாத் எம்.பி. ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.
ஆனாலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரைத்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ராஜ்நாத் சிங்கிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு முழு அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனேவே பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அதே போன்று உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாநிலங்களவையில் நேற்று ராஜ்நாத் சிங்குக்கு எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
லக்னோவில் இன்று நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.