
ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நாகை மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
மத்திய மாநில அரசுகள் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு பிரிட்ஜோவின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தங்கச்சிமடம் மீனவர்களுக்கு ஆதரவாக நாகை மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே 9 ஆவது நாளாக நீடித்து வந்த இப்போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக நாகை மாவட்ட மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.