
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த்து குறித்து தமிழக எம்.பி.க்களின் அனல் கக்கிய பேச்சால் மாநிலங்களவையில் பரபரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் மாணவரின் இம்மர்ம மரணம் தமிழகம் முழுவதும் போராட்டமாக வெடித்துள்ளது. நீதிவிசாரணை நடத்தக்கோரி பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே இப்பிரச்சனை தற்போது மாநிலங்களவையிலும் பூதாகாரமாக வெடித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வுக் கூட்டம் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டிருந்தன.அப்போது எழுந்த தமிழக எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளருமான, டி.ராஜா பலத்த அமளிகளுக்கும் மத்தியிலும் தனது கருத்தை ஆக்ரோஷமாக முன்வைத்தார்..
அப்போது அவர் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது மிக முக்கியமான பிரச்சனை.. இது குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது வேதனையை அளிக்கிறது.இது கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி பேசுகையில், “முத்துகிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.. “சமஉரிமை மறுக்கப்படுவது அனைத்தும் மறுக்கப்படுவதற்குச் சமம்” சரளமான ஆங்கிலம் பேசத் தெரியாததால் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் சேர முடியாமல் முத்துக்கிருஷ்ணன் தவித்துள்ளார்.
பின்னர் நூலகங்களில் ஏறக்குறைய ஒருவருடம் கடுமையாகப் படித்த பின்னரே பல்கலைக்கழகத்தில் நுழைய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.போராட்டக் குணம் கொண்ட முத்துக்கிருஷ்ணன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்…. கல்விக் கூடங்கள் ஜாதி வன்மத்தை கொண்டாதாக மாறி வருவதை இந்தச் சமூகம் ஏற்கிறதா” இவ்வாறு அவர் கூறினார்.