
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் முடிவடைகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அப்போலோ மருத்துவமனை சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தும் வருகின்றனர்.
தமிழக எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர், கேரள ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்ட பலர் அப்போலோ சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வந்தனர்.
இந்த நிலையில், கேரளவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன்சாண்டி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அமைச்சர்கள் மற்றும் மருத்தவர்களிடம் கேட்டறிந்தேன் என்று கூறினார். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அப்போது உம்மன்சாண்டி கூறினார்.