திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அளித்த உத்தரவாதப்படி மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் திமுகவே களமிறங்குகிறது.
திமுக கூட்டணியில் வழக்கமாக மயிலாப்பூர், தியாகராய நகர் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிவிடுவது வழக்கம். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் மயிலாப்பூரில் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் திமுகவே போட்டியிடும். இதை தலைவரிடம் அனுமதி பெறாமலயே நான் சொல்கிறேன். இந்தத் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது” என்று பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற அறிவிப்பையெல்லாம் கட்சியின் தலைவர்தான் அறிவிக்க வேண்டுமே தவிர, உதயநிதி அல்ல என்று கருத்தும் அப்போது அரசியல் நோக்கர்களால் வைக்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கூறியதுபோலவே, இந்தத் தேர்தலில் மயிலாப்பூர், தியாகராய நகர் தொகுதிகளில் திமுகவே போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், சென்னையில் வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மயிலாப்பூர், தியாகராய நகர் தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மயிலாப்பூர், தியாகராய நகரில் கடைசியாக திமுக 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியது.