ரியல் பாலிடிக்ஸ்சை காட்டிய உதயநிதி.. நீதிமன்ற வளாகத்தில் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 28, 2021, 12:02 PM IST
Highlights

வழக்கறிஞர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி துவங்கி வைத்தார். 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி.வில்சன், தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முகாமின் முதல் தடுப்பூசியை இரண்டாவது தவணையாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செலுத்திக்கொண்டார்.முகாமை தொடங்கிவைத்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசியபோது, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என்றும், கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தனி மனித இடைவெளி நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கொரோனா பெருந்தோற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி தான் எனவும், 11 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில், 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது வரை செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள 9 கோடி தடுப்பூசி மருந்துகளை பெற்று தர உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மத்திய அரசால்தான் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை தலைமை நீதிபதி உள்ள மேடையிலேயே வெளிப்படுத்தும் வகையில் உதயநிதியின் பேச்சு அமைந்தது. மேடையில் பேசியது போலவும் ஆச்சு, அதே நேரத்தில் நீதிமன்றத்தின் காதில் தகவலை போட்டமாதிரியும் ஆச்சு . இதுதாங்க அரசியல் என உதயின் பேச்சு குறித்து அங்கிருந்த பலரும் முனுமுனுத்தனர்.  

 

click me!