
கோபிசெட்டிப்பாளையத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு தேவையான நிதியுதவி செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த பஞ்சத்தை போக்க நிதி ஒதுக்கப்பட்டு வறட்சி பாதித்த பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை தூர் வாருதல், கிணறுகள் அமைத்தல், பாம்பு செட்டுகள் அமைத்தல், அதிக நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வறட்சியினால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்குதல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், கோபிசெட்டிப்பாளையத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு தேவையான நிதியுதவி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் பிரபாகர், நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.