
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமடைந்தனர்.
ஒருவழியாக இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. அதில், டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், “ஆட்சி மன்ற குழுவின் விருப்பப்படி நான் ஆர்.கே. நகர் தொகுதில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை மட்டுமே நாங்கள் எதிரியாக கருதுகிறோம்.
இந்த தேர்தலில் போட்டியிடும் நான், கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் அங்கு நிறைவேற்றப்படும். வருகிற 23ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்வேன்.
மேலும் தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிக்ள், மதிமுக மற்றும் இதர கட்சிகள் எனக்கு ஆதரவு தெரிவித்து, தெரிவிக்க வேண்டும். எங்களது ஒரே எதிரி திமுக மட்டுமே என்றார்.